Pages

Tuesday 30 October 2012

LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம்

LE TROU -- பார்த்தே ஆக வேண்டிய பிரெஞ்சு படம் 

ஒரு படம் உங்களை எவ்வளவு தூரம் படத்தினுள் இழுக்கும்? சரி சிறைச்சாலை பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன.PRISON ESCAPE FILMS என்று ஒரு சின்ன GENRE கூட உண்டு.எல்லோருக்கும் தெரிந்த படம்  THE SHAWSHANK REDEMPTION .அதை விட அருமையான PAPILLON,THE ESCAPE FROM ALCATRAZ,THE GREAT ESCAPE (நான் பார்த்தவரையில் ) போன்ற படங்களும் ஒன்று.நான் இப்போது சொல்ல போகும் படம் எல்லாவற்றிற்கும் தலை .இது ஒரு பிரெஞ்சு மொழி படம்.1960 வந்த கருப்பு வெள்ளை படம்.அப்படி என்ன படத்தில்? .படத்தில் நடித்த ஒரு நடிகர் நிஜ கைதியாய் இருந்தவர்.அவர் சிறையில் இருந்து தப்பிய உண்மை அனுபவங்களே படம். 

அந்த நிஜ பாத்திரம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு 1947 இல் தான் சந்தித்த நிகழ்வுகளே படம் என்ற அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.பிரான்ஸ் நாட்டில் 1947 இல் "ல சாண்டே" என்ற மிக பெரிய சிறையில் ஒரு கைதி கஸ்பர்ட் .மனைவியை கொள்ள முயற்சி செய்த புகாரில் சிறையில் இருக்கிறான்.ஒரு சின்ன தப்புக்காக வேறு ஒரு செல்லுக்கு மாற்ற படுகிறான்.அவன் சென்ற அறையில் ஏற்கனவே 4 பேர் இருக்கின்றனர்.அவர்களிடம் அன்பாக பழகும் கஸ்பரட் தான் சிறை வந்த காரணத்தை சொல்கிறான்.

சில நாட்களுக்கு பின் அந்த நால்வரும் தாங்கள் சிறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் இருப்பதாக அவனிடம் சொல்கிறார்கள்.ஆர்வம் அடையும் அவன் தானும் வருவதாக சொல்கிறான்.அந்த சிறையில் அறைகளில்  தினமும் அதிகாலையில் ஒரு போலீஸ் வந்து சோதனை இட்டு செல்லும்.அதன் பின் நாள் தோறும் அவ்வபோது ,மீண்டும் இரவு உறங்கும் போது அவர்கள் அறை  கதவை தட்டி கதவு ஓட்டை வழியே பார்க்கும்போது கைதிகக் கை அசைக்க வேண்டும்.இது தான் அங்கே விதி.

முதலில் ஒரு சிறிய  கண்ணாடி அவர்களிடம் கிடைக்கிறது .அதை ஒரு பிரஷ்ஷில்  கட்டி அதை கதவு ஓட்டை வழி வைத்து யாரவது வருகிறார்களா என்று பார்க்க பயன்படுத்தி கொள்கிறார்கள்.பின் சிறையில்  அட்டை பெட்டி செய்யும் வேலை அவர்களின் அறையிலேயே செய்து வருகிறார்கள்.அதற்காக பெரிய அளவில் அட்டைகளை ஒரு மூலையில் அடுக்கி வைக்கிறார்கள்.அவ்வபோது அந்த அட்டைகளை நகர்த்தி கட்டிலின் காலில் இருந்து எடுத்த இரும்பால் தரையை இடித்து குழி தோண்டுகிறார்கள்.

அவர்கள் தோண்டும் மணலை என்ன செய்தார்கள்? உள்ளே வழி அவ்வளோ எளிதாக உள்ளதா? அங்கே வழியில் போலீஸ் இல்லையா? இவர்கள் தோண்டும்போது போலீஸ் இவர்கள் அறைக்கு வரவில்லையா? இரவு போலீஸ்  கதவு தட்டினால் இவர்கள்  கை அசைக்க வேண்டுமே அதற்க்கு ? இப்படி எண்ணற்ற கேள்விகள் வருகிறதா? அப்போது நிச்சயம் படம் பாருங்கள்.நான் மேலே கொஞ்சம் காட்சிகளை சொன்னதே படம் பார்க்கும் ஆவலை தூண்டத்தான்.
கொஞ்சமும் போர் அடிக்காத ஆனால் அழுத்தமான படம் .கிளைமாக்ஸ் எனக்கு கொஞ்சம் திருப்தியில்லை ,இருந்தாலும் எற்றுக்கொளும்படி இருக்கும் .

படத்தை பற்றி சில விஷயங்கள்- படத்தின் இயக்குனர் படத்தை எடுத்து முடித்த 2 வாரங்களில்  மரணம் அடைந்து விட்டார்.பெரும்பாலும் தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம்.மொத்த  படமும் 10 வாரத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.படத்தில் இசையே கிடையாது.இதுவரை நீங்கள் இதுபோல் எத்தனை படம் பார்த்திருந்தாலும் இது இன்னும் fresh ஆக இருக்கும்.தவற விட கூடாத படம்.2 மணி நேரம் ஓடும் படம்.

IMDB RATING- 8.4

HIGHLY RECOMMENDED 



Monday 29 October 2012

TRIANGLE (2009) --குழப்பும் ஆங்கில த்ரில்லர் படம்


TRIANGLE (2009) --குழப்பும் ஆங்கில த்ரில்லர்  படம் 



நீங்கள் பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு கடற்பகுதியே அது.அந்த பகுதியில் போன பல கப்பல்கள் மாயமாய் காணாமல் போய்  உள்ளது.அதை ஆராய சென்ற பறக்கும் விமானங்கள் உள்ளே இழுக்கப்பட்டு காணமல் போயின.அதற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நீங்கள் "MOMENTO" " THE MACHINIST " போன்ற படங்களின் ரசிகரா? அதற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம்.உங்களை குழப்பி அடிக்கும் படம் திரும்ப திரும்ப ஒவ்வொரு காட்சியிலும் உங்களுக்கு எதோ ஒன்றை காண்பித்து சென்று அதை பின்னர் தெளிவு படுத்தும்( எனக்கு தெளியவில்லை.) 

கதையை எப்படி சொல்லி அறிமுக படுத்துவது என்று தெரியவில்லை.சரி பாயிண்ட் பை பாயிண்ட் என்று போவோம்.
1.ஒரு பெண்.அவளுக்கு மன குறைபாடோடு ஒரு சின்ன பையன்.
2.அவனை பள்ளியில் விட்டு அவள் ஒரு கப்பல் பயணத்திற்கு சில நண்பர்களோடு போகிறாள்.
3.நடுக்கடலில் அவள் சென்ற கப்பல் விபத்து ஏற்பட, அங்கே வரும் ஒரு பெரிய கப்பலில் எல்லோரும் ஏறுகிறார்கள்.
4.கப்பல் முழுக்க தேடியும் யாரும் காணோம்.ஓட்டுபவரும் இல்லை.
5.நாயகி தான் இந்த கப்பலில் ஏற்கனவே வந்தது போல் உள்ளதாகவும் அந்த இடங்களை உணருவதாகவும் சொல்கிறாள்.
6.அடுத்தடுத்து ஒவ்வொருவராக கொள்ள படுகிறார்கள்.இறப்பவர்கள் இவளை கொலையாளி என்று சொல்லி இறக்கிறார்கள்.
7.புரியாமல் சுற்றி வரும் வரும் இவள் மீண்டும் தாங்களே இந்த கப்பலில் ஏறுவதை பார்க்கிறாள்.
8.மீண்டும்  பாயிண்ட் 4- பாயிண்ட் 7
9.கடைசியில் திரும்ப பாயிண்ட் 1 முதல் ஆரம்பம் .

எனக்கு உண்மையில் படம் தெளிவாக என்ன நடக்கிறது என்று புரியவில்லை.ஆனால் நல்ல படம் தான்.எனக்குதான் புரியவில்லை.அது மட்டும் எனக்கு புரிந்து போனது.குழப்பறேனா? நான் படம் பார்த்து ரொம்ப குழம்பி போய் இருக்கேன்.இது என்ன படம் ,இது கூட புரியலையா என்று சிலர் கேட்கலாம்.இருந்தாலும் நான் அவ்வளதான்.

படமாக்கப்பட்ட இடங்கள் (ஆஸ்திரேலியா ) அருமை.அந்த கப்பல் ,படத்தின் கேமரா எல்லாமே பாராட்டும்படி உள்ளது.
படத்தை பற்றி சில விஷயங்கள் :

99 நிமிடங்கள் ஓடும் படம் 2009 இல் வெளி வந்தது.
படத்தை எழுதியவர் திரைகதை எழுதி முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாக கூறியுள்ளார்.
விமர்சகர்களால் பலத்த பாராட்டை பெற்றாலும் படம் வசூலில் சுமார்தான்.
ஏறக்குறைய எல்லா விமர்சனங்களும் சராசரியாக 4 OUT OF 5 RATING கொடுத்துள்ளது.
ROTTEN TOMATOES -81% FRESH 
IMDB- 6.8 

இப்போது வரும் எளிதில் யூகிக்க கூடிய படங்கள் பார்த்து வெறுத்து போய் உள்ளீர்களா?  MIND TWISTING வகை படங்கள் பிடிக்குமா ? நிச்சயம் பாருங்கள்.

TIME CRIMES என்று ஒருபடம் சென்ற வருடம் பார்த்தேன்.அதுவும் எனக்கு புரியாத படம் தான்.ஒரு நண்பரிடம் கேட்டபோது கொஞ்சம் கவனித்து பார்த்தல் புரியும் என்றார்.

Thursday 25 October 2012

பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம்


பிட்சா : பார்த்தே தீர வேண்டிய த்ரில் படம் 



தமிழில் திகில் த்ரில்லர் படங்கள் ரொம்ப குறைவு.விரல் விட்டு எண்ணி விடலாம்.பெரும்பாலும் ஆங்கில படங்களின் தழுவல் படங்களே அதிகம்.அதே கண்கள் ,யாவரும் நலம் போன்ற மிக சில படங்களே சொந்த சரக்காக வந்த படங்கள்.நான் கொஞ்சம் எதிர்பார்த்த அம்புலி கூட முழுதும் எனக்கு திருப்தி தரவில்லை.இந்த நிலையில் பிட்சா படம் ஒரு த்ரில்லர் படம் என்று கேள்வி பட்டேன்.இருந்தாலும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தேன்.ட்ரைலர் கவனிக்கும்படி இருந்தாலும் அதை நம்பி இப்போதெல்லாம் படம் பார்க்க முடிவதில்லை.படம் வந்த அடுத்த நாள் பார்த்த எல்லோரும் படம் சூப்பர் என்று சொல்ல அதுவும் படித்த ப்ளாக் எல்லாம் கதையை சொல்லாமல் விட்டதால் படம் பார்க்கும் ஆவல் கூடி விட்டது.ஒரு வழியாக பார்த்துவிட்டேன்.

சமீப காலங்களில் இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும்.சும்மா மிரட்டி இருக்கிறார்கள்.நானும் கதை சொல்ல போவதில்லை.என்ன விஷயம் என்றால் மற்ற த்ரில்லர் படம் என்றால் ஒரு விஷயத்தை சொல்லி இறுதியில் என்ன நடக்கிறது என்பதை சொல்லாமல் விட்டால் போதும்.ஆனால் இந்த படம் கதை என்று ஆரம்பித்தால் படத்தின் ஆச்சர்யம் போய்விடும்.

படம் மெதுவாக கொஞ்சம் சோம்பலாகதான் தொடங்குகிறது.ஆனால் ஹீரோ தன் முதலாளி வீட்டிற்கு சென்றதும் அங்கே சூடு பிடிகிறது.அதோடு படம் முடியும் வரை உங்களை அடுத்து என்ன என்று யோசிக்க செய்துகொண்டே இருக்கும்.சில படங்கள் இடைவேளை எப்படா வரும் என்று இருக்கும்.இந்த படத்தில் இடைவேளை விட்டதும் அடச்சே என்று திட்டிகொண்டேன்.இடைவேளை நேரத்தில் கூட படத்தில் இருந்து கவனம் போகவில்லை.

படத்தில் பணி புரிந்த எல்லோருக்கும் இந்த படம் ஒரு லைப்.அசத்தி  இருக்கிறார்கள்.கேமரா ,இசை சூப்பர்.இயக்குனர் கார்த்திக் இதுவரை யாரிடமும் உதவியாளரை இருந்ததில்லை.குறும்படங்களில் கவனம் பெற்று அதை சினிமாவாகவும் செய்து காட்டி இருக்கிறார்.ஒரு வெல்கம் .

பேய்களை நம்பாத ஹீரோ .அவனை பயமுறுத்த நாயகி செய்யும் வேலைகள் தான் படம் இறுதியில் எல்லாம் நாடகம் .WAIT WAIT. .இது ட்ரைலர் பார்த்து நான் நினைத்த கதை. உண்மையில் நாயகி என்று ஒருவள் இல்லை.நாயகன் மன அளவில் பாதிக்க பட்டவன் .அவனின் பேய் கற்பனையே படம்.இது படம் ஓடி கொண்டிருக்கும் போது என் மனதில் வந்த கதை. மேல் சொன்ன எதாவது ஒன்றை நீங்கள் படத்தின் கதையாக நினைத்திருந்தால் அதை மறந்திருங்கள்.

                     படத்தை பற்றிய ஒரு சின்ன TAGLINE: ஒவ்வொருவருக்கும் ஒரு வீக்னெஸ் .பணம்,பெண் பேய் ,கடவுள் இப்படி.

இது படத்தின் சஸ்பென்சை உடைக்காது என்று நினைக்கிறன்.படத்தை மினி உதயம் அரங்கில் பார்த்தேன்.படம் HOUSEFULL . நான் ப்ளாக்கில் 70 ருபாய் டிக்கெட்டை 130 கொடுத்து வாங்கி பார்த்தேன்.படம் முடிந்து வரும் போது இந்த படத்தை போய்  ப்ளாக்கில் பார்த்தோமே என்று கொஞ்சமும் இல்லை.நம் ரசிகர்கள் தமிழில் த்ரில் படம் பார்த்து பழக்கம் இல்லாததால்,அரங்கில் வெறுப்பேற்றி விட்டார்கள்.கூட கூட கமெண்ட்.படத்தின் ஆரம்ப காட்சி கருப்பு வெள்ளையில் ஒலி குறைவாக நடக்கும்.அதை கேட்கவிடாமல் ரொம்பவும் கடுப்பேற்றி விட்டார்கள்.இருந்தாலும் படத்தை ரசிக்கிறார்கள்.இது போல் இன்னும் நிறைய படங்கள் தமிழில் வர வேண்டும்.எனக்கு த்ரில் படங்கள் பிடிக்கும் என்பது தெரிந்திருக்கும்.

Tuesday 23 October 2012

கமலஹாசன் எழுதிய "நாயகன்" திரைப்பட நினைவுகள்


கமலஹாசன்  எழுதிய "நாயகன்" திரைப்பட  நினைவுகள்  


தமிழ் சினிமாவில் நாயகன் தவிர்க்க முடியாத படம்.அந்த படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதன் பொருட்டு அந்த பட அனுபவங்களை  நடிகர் கமல்ஹாசன் 'தி ஹிந்து ' ஆங்கில தினசரியில் அக்டோபர் 21 ஞாயிறு ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அதன் தமிழாக்கம்..

நாயகன் படம்  டைம் இதழின் சிறந்த 100 படங்களுள் ஒன்றாக தேர்வு செய்யபட்டதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.ஒரு வித்யாசமான படம் எடுக்க நினைத்தோம் அவ்வளவுதான்.அதிகம் படிக்காததால் நான் எப்போதும் எழுத்தாளர்களும் ,சிந்தனையாளர்களும் சூழ இருப்பேன்.அப்படி சந்தித்த ஒரு நண்பர் தான் சுப்பு என்கிற சுப்ரமணியம்.பின்னர் மணிரத்னம் ஆனார்.எனக்கு நடிகர் கிட்டி மூலம் அறிமுகம் ஆனவர் தான் மணிரத்னம்.கிட்டி அப்போது சோழா செர்டான்  ஹோட்டலில் மேலாளராக இருந்தார்.நாங்கள் அவரை அப்போது சோழா கிருஷ்ணமூர்த்தி என்று அழைப்போம்.மணி அப்போதும் அமைதி ஆனவர் தான்.நாயகன் தொடங்கப்பட்ட பின் தான் மணி "வீனஸ் " pictures  ரத்னம் அவர்களின் மகன் என்பதே.அதுவரை அவர் தன்னை வெளிபடுதிக்கொண்டதே இல்லை.எனக்கு அதுவரை அவரை பைனான்சியர் ஜி.வி.அவர்களின் சகோதரர் என்றே தெரியும்.

அப்போது நான் ராஜபார்வை எழுதிக்கொண்டிருந்த நேரம்.1980.மணி திரை கதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார்.JOSEPH HAYES  எழுதிய THE LONG DARK NIGHT நாவலை  விரும்பி படித்தார்.அது போல் ஒரு கதை எழுத விரும்பினார்.நாங்கள் பல கதைகளை விவாதித்தோம்.நாங்கள் FRANSIS FORD COPPOLA வின்  THE GODFATHER பட ரசிகர்கள்.எத்தனை நாள்  தான் தமிழ் பட மறை உலக வில்லன்கள்  கட்டம் போட்ட சட்டையும் கழுத்தில் கை குட்டையை கட்டிக்கொண்டும் வீரப்பா  போல் சிறிது கொண்டும் இருப்பார்கள் என்று நாங்கள் கேட்டு கொள்வோம்.

அப்போது மணி தனது முதல் படத்தை (பல்லவி அனுபல்லவி)கன்னடத்தில் இயக்குவதாக சொன்னார்.நான் ராஜபார்வையில் பிசியாக இருந்தேன்.அந்த நேரம் ஹிந்தி படங்களில் வேறு நடிக்க துவங்கி இருந்தேன்.அதனால் நானும் மணியும் சேர முடிய வில்லை.ஆனால் நேரம் கிடைத்தால் பேசுவோம்.1986 இல் விக்ரம் படம் முடிந்த பின் அந்த படம் மணிரத்னம் இயக்கி இருக்க வேண்டிய படம் என்று எனக்கு தோன்றியது.IT WAS HIS CUP OF TEA.பட தோல்விக்கு பின் என்ன ஆனது என்று என்று என்னை கேட்டார் மணி.ஏன் என்றால் விக்ரம் பட கதை நான் முன்பே அவரிடம் கூறி இருந்தேன்.அதற்கும் படத்திற்கு நிறைய மாற்றம்."கமல் ,சுஜாதா இருவரின் அறிவும் கோடம்பாக்கத்தில் கரைந்துவிட்டதாக பதில் சொல்லி "இது உங்களுக்கும் நேரலாம் என்றும் சொன்னேன்.

சில மாதங்களுக்கு பின் தயாரிப்பாளர்  முக்தா ஸ்ரீனிவாசன் (அவர் தயாரிப்பு இயக்கத்தில் சிம்லா ஸ்பெஷல் படம் ஏற்கனவே நடித்துள்ளேன்) என்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.நான் மணிரத்னம் பெயரை இயக்குனராக சொன்னேன்.அவருக்கு ஆச்சர்யம் காரணம் வழக்கமாக கதாநாயகியை தான் ஹீரோக்கள்  பரிந்துரைப்பார்கள்.நான் ஒரு இயக்குனரை  பரிந்துரைத்தேன்.மணி இரு கதைகளை எனக்கு சொன்னார் ஒரு கதை GANGSTER கதை.பம்பாய் களமாக  கொண்டு நடக்கும் கதை என்றும் சொன்னார்.நான் அந்த கதை தேர்வு செய்தேன் காரணம் பம்பாய் தளம் என்றால் தேசிய அளவில் கவனிக்கபடும் என்று நினைத்தேன்.ஆனால் முக்தா பிலிம்ஸ் சிறிய பட்ஜெட்  படம் எடுத்து பழக்கப்பட்ட நிறுவனம்.தயாரிப்பாளர் பம்பாய் என்றவுடன் மறுத்தார். என் நடிப்பில் ஒரு படம் அவருக்கு  ஒரு 5 லட்சம் லாபம் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.அவர் அதுவரை அப்படிதான் படங்கள் எடுத்து வந்தார்.கலையாக கருதாமல் படம் வியாபாரம் மட்டுமே என்று நினைத்துவிட்டார்.நாங்கள் படம் முழுதும் பம்பாயில் எடுக்க போவதில்லை.சில முக்கிய காட்சிகள் மட்டுமே ,என்று சொன்னதும் அரை மனதுடன் சம்மதித்தார்.

பின் நாங்கள் ACTION காட்சிகள் உலக தரத்தில் எடுக்க முடிவு செய்தோம்.அதற்கென பட்ஜெட்டில் 12 லட்சம்  ஒதுக்கினோம் .அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒதுக்கியது கிடையாது.  JIM ALLEN என்பவரை இங்கிலாந்தில் இருந்து வரவழைத்தோம்.அவர் அதற்கு முன் ஷோலே போன்ற இந்திய படங்களில் பணி புரிந்துள்ளார்.அனால் தயாரிப்பாளர் அவரை 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த சம்மதித்தார்."இதற்கெல்லாம் இப்படி செலவு செய்ய கூடாது,ஹிந்தி சினிமா உன்னை கெடுத்து விட்டது என்று என்னிடம் சொன்னார்.அந்த 3 நாட்களில் அவர் கொடுத்த ஐடியாக்களை குறிப்பெடுத்துகொண்டு அவற்றை பயன்படுத்தினோம்.கார் முன்புற கண்ணாடியில் இரும்புக்கம்பி சொருகி சண்டை காட்சி எடுக்க திட்டமிட்டோம் .அனால் தயாரிப்பளர் காரை நிஜமாக சேதபடுத்த ஒத்துக்கொள்ளவில்லை.பின்னாளில் தேவர் மகன் படத்தில் அதை பயன் படுத்தி கொண்டேன்.படத்தில் மேக்கப் செய்ய தனி பட்ஜெட் கிடையாது.என் மேக்கப் குரு MICHAEL WESTMORE அவர்களிடம் பேசினேன்.அதற்குமுன் "ஒரு கைதியின் டைரி " படத்திற்காக அவரோடு பணிபுரிந்துள்ளேன்.ஒரு உதவியாளர் மட்டும்' கொண்டு நாமே கண்ணாடி முன் ஒப்பனை செய்து கொள்ள அவரிடம் பயிற்சி பெற்று இருந்தேன்.அப்போது  சரிகா உதவியுடன் நானே மேக்கப் போட்டுக்கொண்டேன்.நான் ஏற்கனவே வயதான வேடத்தில் நடித்துள்ள கடல் மீன்கள்,சலங்கை ஒலி போன்ற படங்களை பார்த்துள்ள மணிரத்னம் ,அந்த படங்கள் போல விக் வைக்காமல் நிஜமாகவே தலை முடியை அட்ஜஸ்ட் செய்ய விரும்பினார்.நானும் படத்தை காட்சி வரிசைப்படி எடுத்தால் அதை செய்யலாம் என்று சொன்னேன்.படத்தில் தெரியும் வழுக்கை உண்மையாக என் முடியை அப்படி சீர் செய்யப்பட்டது.அது மட்டும் போதாது என்று ஒரு பல் மருத்துவரை கொண்டு வாயில் ஒரு பொருளை வைத்து முகவாய் ,தாடைகள் அகலமாக தெரியும்படி செய்தோம் .

நாங்கள் ஒரு பெரிய விஷயத்தை,புதிதாய் செய்கிறோம் என்று உணர்ந்தோம்.நான்,மணி,பி.சி .ஸ்ரீராம்,தோட்டாதரணி ஒரு குழுவாக கால்ஷீட் எல்லாம் பார்க்காமல் உழைத்தோம்.முழுதும் பம்பாயில் எடுக்க முடியாததால் வெளிகாட்சிகள் மட்டும் அங்கே போய்  எடுத்தோம்.படம் நன்றாக வளர்ந்து வந்தது.ஒரு நாள் ,வேலு நாயகரின் மகன் இறந்து விட்ட காட்சி.நாங்கள் அந்த காட்சியை ஒத்திகை பார்த்தோம்.நான் இந்த காட்சியில் கொஞ்சம் பில்ட்அப்  இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்,அதாவது மற்றவர்கள் முதலில் அழுது கொண்டிருப்பது போலும் அங்கே வரும் வேலு நாயக்கர் எல்லோரிடமும் என்ன என்று விசாரித்தவாறு வந்து மகனின் பிணத்தை பார்த்தால்  நன்றாக இருக்கும் என்று மணியிடம் சொல்ல அவரும்  ஒப்புக்கொண்டார்.நான் அந்த காட்சிக்கு தயாராகி வந்த போது மணி,ஸ்ரீராம் இருவரும் வருத்தமாக இருந்தார்கள்.விசாரித்த போது  தயாரிப்பாளர் அன்றைய பிலிம் கோட்டா முடிந்து விட்டதென்றும் அடுத்து பிலிம் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று சொன்னார்.அந்த நாளில் பிலிம்  வேஸ்ட் ஆவதை குறைக்க அப்படி செய்வது தான் பழக்கம்.என்னால் தாங்க முடியாமல் என் அலுவலகத்திற்கு போன் செய்து 20 நிமிடத்தில் பிலிம் வரவைத்தேன்,அந்த 20 நிமிடத்தில் நான் அழ ஆயத்தமானேன்.உண்மையில் அந்த சூழ்நிலை என் குழந்தை இறந்த மன நிலையை உருவாக்கியது.அந்த காட்சியில் சிறப்பான நடிப்பிற்கு தயாரிப்பாளரின் பங்கும் உண்டு.அதற்காக அவர் ரொம்ப கொடியவர் என்று சொல்ல வர வில்லை.அவர் அந்த காலங்களில் அதுபோல் பழக்கபட்டிருந்தார்.
மணிரத்னதிற்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை.அந்த நேரத்தில் நானும் ரொம்ப களைப்பு அடைந்திருந்தேன்.படம் முடியவேண்டும் என்று நினைத்தேன்.நாங்கள் பம்பாய் சென்றிருந்தபோது வரதராஜ முதலியாரை(அவர் வாழ்கையை சித்தரிதே நாயகன்  படம் உருவானது) சந்தித்து உரையாடினோம்.அவரிடம் மணி உங்கள் வாழ்கை எப்படி முடிய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.அமைதியாக மருத்துவமனையில் அது நடக்க விரும்புகிறேன் என்று பதில் சொன்னார்(பின்னாளில் அப்படியே இறந்தார் ).போலீஸ் சாட்சி இல்லாததால் அவரை விடுதலை செய்யும்.அதன் பின் வேலு நாயக்கரை யாரோ அடித்துவிட அதனால் ஏற்படும் கலவரத்தை பயன்படுத்தி போலீஸ் அவரை சுட்டுகொல்வதாக மணி முடிக்க விரும்பினார்.

ஹோலி பாடலில் நான் மணியிடம் வேலுநாயக்கர் ஆடமாட்டார் என்று சொன்னேன்.அவரும் ஒப்புகொண்டார்.அந்த காலங்களில் நான் நடனம் ஆடாததை ஒப்புக்கொள்ள எந்த இயக்குனரும் சம்மதிக்க மாட்டார்கள் .சிகப்பு ரோஜாக்கள் எடுக்கும் போது பாரதிராஜாவிடம் கூட நான் அந்த பட நாயகன் ஒரு சைக்கோ கொலைகாரன்.அவன் நடனம் ஆடினால் சரிவராது என்று சொல்லிப்பார்த்தேன்.அவர் இது நாயகி கனவுப்பாடல்(நினைவோ ஒரு பறவை) என்று நான் சொன்னதை மறுத்துவிட்டார்.மணி ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி.இப்படி பல தடைகளை தாண்டி எடுத்து முடிக்கப்பட்டது படம்.நான் சிரித்தால் தீபாவளி பாடலில் நான் பார்த்த ஒரு பார்வை ரொம்பவும் அன்னியமாக தோன்றியதாகவும் நம் இந்திய முறையில் நடிப்பை வெளிப்படுத்துமாறும் என்னை கேட்டுக்கொண்டார்.இப்படி சின்ன விஷயங்களிலும் ரொம்பவும் கவனித்து  சொன்னதால் என்னால் அந்த நடிப்பை தரமுடிந்தது.நாயகன்  படம் என்னை இனி மசாலா வணிக படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை எடுக்க வைத்தது.நான் நடு  வயதை அடைந்திருந்தேன் .இனி இப்படி பட்ட வேடங்களில் நடிக்காமல் இன்னும் எப்போது நடிப்பது என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.படம் முடிந்தவுடன் அந்த செட் கலைக்கபட்டவுடன் சரிகாவுடன் திருப்தியாக பேசிக்கொண்டே நடத்து இன்னும் நினைவில் உள்ளது.

படம் சவேராவில் சிறப்பு காட்சி பார்த்தோம்.ஒருவர் படம் முடிந்து தயாரிப்பாளர் காலில் விழுந்து அழுதார்.நான் தயாரிப்பாளரிடம் இந்த படத்திற்கு விருதுகள் வாங்குவீர்கள் என்று சொன்னேன்.அதற்க்கு அவர் லாபம் பார்க்கவே படம் எடுத்ததாகவும் ஆனால் படத்தின் புதிய தொழில்நுட்ப விஷங்கள் மக்கள் ஏற்பார்களா என்று பயந்தார்.அவர் லாபம் அடையாத படத்தை நான் அவருக்கு பரிந்துரை செய்ததாக  வருத்தப்பட்டார் .அவரிடம் இருந்து அந்த படத்தை வாங்கி கொள்ள கூட நினைத்தேன்.பின்னர் ஜி.வி வாங்கி வெளியிட்டார்.படம் வெளிவந்து ஹிட் ஆனது.அதன் பின் அது ஸ்டைல் ஆனது.ஹீரோக்கள்  ஜெல் வைத்து அழுத்தி தலை வாருவதை ஆரம்பித்தனர்.படத்தின் வெள்ளி விழா நேரத்தில் தயாரிப்பாளரின் சகோதரர் இறந்துவிட்டார்.எங்கள் மொத்த  பட குழுவும் அவர் வீட்டிற்கு போய் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம்.அதனால் தயாரிப்பாளரோடு எந்த பிரச்னையும் இல்லை.அவர் எங்களை இன்னும் சுதந்திரமாக படம் எடுக்க விட்டிருந்தால் மணி இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார். பின்னாளில் அவருக்கு இதய நோயும் இன்னும் காலம் கழித்து வந்திருக்கும்.என்னிடம் பலர் கேட்க்கும் கேள்வி மணிரத்னத்தோடு மீண்டும் படம் எப்போது? இப்போது ரொம்பவும் எதிர்பார்ப்பு உள்ளது .

Sunday 21 October 2012

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.

BHOOT RETURNS -ஹிந்தி திகில் பட விமர்சனம் ---சரக்கு தீர்ந்து போன ராம் கோபால் வர்மா.


ராம் கோபால் வர்மா .ரங்கீலா படம் மூலம் அசத்தலாக ஹிந்தியில் நுழைந்து சத்யா,கம்பெனி ,சர்கார் போன்ற பல புதுமையான படங்களை தந்து வழக்கமான மூன்றை மணி நேர குடும்ப ஹிந்தி பட பார்முலாவை தகர்த்து பல தளங்களில் ,பல உண்மை சம்பவங்களை ,பல நிஜ கதா பாத்திரங்களை தன்  படங்களில் உலாவ விட்டு கலக்கி கொண்டிருந்தவர். அமிதாப் சில வருட இறக்கங்களுக்கு பின் வெற்றி பெற துவங்கிய பின் மீண்டும் சர்கார் படம் மூலம் மாஸ்  சேர்த்தவர்.


இப்படி தான் இவர் படம் இருக்கும் என்று கணிக்க முடியாதபடி படம் எடுப்பவர்.படம் எடுப்பது குடிசை தொழில் போல என்று டிஜிட்டல் கேமரா ,ஒரு ஐந்து பேர் பணம் போடுவது என்று நடிகர்களுக்காக காத்திராமல் கிடைத்தவர்களை கொண்டு படம் எடுத்து பேச வைத்தவர்.மேலும் தென் இந்திய தெலுங்கு ,கன்னட ,தமிழ் நடிகர்களை தன ஹிந்தி படங்களிலும் பயன் படுத்தி அவர்களுக்கும் அங்கே ஒரு முகவரி தந்தவர்.தன்  வெளிபடையான பேச்சு ,நடிகர்களை பற்றிய விமர்சனம்,குடும்ப உறவுகள் பற்றி தன் எண்ணம் என்று எதற்கும் அஞ்சாமல் தான்  நினைத்ததை சொல்பவர்.ஹிந்தி சினிமாவில் செல்லமாக "ராமு ".

சில வருடங்களுக்கு முன் 'பூத் ' என்று ஒரு பேய் படம் எடுத்தார்.ஹிட் ஆன படம்.அதை தமிழில் நம்ம பிரசாந்த் "ஷாக் " என்று ரீமேக் செய்தார்.இப்போது ராமுவுக்கு தொட்டதெல்லாம் காலி ஆகும் நேரம்.வரிசையாய் அடி.இருந்தாலும் சராமரியாக படம் எடுத்து தள்ளி கொண்டிருக்கிறார்.அந்த படங்கள் ஓடுவதும் இல்லை.கடைசியாக அவர் படம் எது ஹிட் என்று அவருக்கே மறந்து போய் இருக்கும்.இப்போது அவருக்கு ஹிட் தேவை.என்ன செய்வது என்று யோசித்தவர்,தன்  ஹிட் படமான பூத் படத்தின் இரண்டாம் பாகம் என்று எடுத்துள்ளார்.ஏதாவது ஒரு கன்றாவியை எடுத்து அதற்க்கு எப்போதோ ஓடிய தன்  ஹிட் படத்தின் பேரை போட்டால் கல்லா நிரம்பிவிடும் என்று நினைத்து விட்டார்.(இங்கே நம் பில்லா 2 உங்களுக்கு நினைவுக்கு வரணும் ).

ஒரு பேய் வீடு .
அங்கே வரும் குடும்பம்.
அவர்கள் குழந்தை கண்ணுக்கு மட்டும் தெரியும் பேய்.
அதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபரீதங்கள்.
இறுதியில் முடிக்க கூடாது அந்த பேய் எங்கோ மீண்டும் செல்வது போல் முடிக்க வேண்டும் .
ஒரு பேய் படம் ரெடி.

கொஞ்சமும் மாறாமல் அதே கதை தான்.என்ன கொஞ்சம் இந்திய சினிமாவிற்கு புதிதாய் cctv  அந்த வீட்டில் இணைத்து பேய் உலாவுவதை காட்டுகிறார்கள்.
நான்கே நடிகர்கள்.இரண்டு குழந்தைகள்,ஒரு பொம்மை .படத்தில் நிறைய நேரம் யாரவது ஏதாவது சத்தம்  கேட்டு வீட்டில் இருட்டில் உலாவுகிறார்கள்.தேவைக்கு அதிகமாய் சவுண்ட்என்ஜினியர் சத்தம்  கொடுத்துள்ளார்.ஒரே ஆறுதல் பாடல் ,காதல் என்று எதுவும் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் படத்தை முடித்தது .ராம் கோபால் வர்மாவிடம் சரக்கு தீர்ந்து விட்டது (நம்ம மணிரத்னம் போல ) என்று நினைக்க தோன்றுகிறது  .

Friday 19 October 2012

மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?


மாற்றான் படத்தில் என்ன பிரச்சனை?

முந்தைய கே.வி.ஆனந்தின் படங்களான அயன்,கோ இரண்டுமே எனக்கு பிடித்த படங்கள்.ஒரு கதையை லாஜிக் அது இது என்று மற்ற விஷயங்களை பற்றி யோசிக்க விடாமல் பரபர திரை கதையால் அதே நேரம் ஹரி படம் போல் வீண் பரபரப்பு இல்லாமல் இளமை ததும்பும் வசனங்களோடு கொஞ்சம் விரசமான வசனங்களோடும் ,பாடல்களை வித்யாசமான இடங்களில் படமாக்குவதும் என்று ஒரு ஸ்டைல் ஏற்படுத்தி கொண்டவர்  கே.வி.ஆனந்த்.அவரது கவனிக்க படாத படமான கனா கண்டேன் படமே நல்ல படம் தான் .சூர்யா தற்போதைய தமிழ் சினிமாவின் விராத் கோஹ்லி .ஹிட் பாடல்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் என ஜோராக களம் இறங்கிய மாற்றான் வெள்ளி கிழமை முதல் பதிவுகளில் கிழித்து தொங்கவிடபட்டு கொண்டு இருக்கிறது.நான் ஏற்கனவே இந்த படம் திரை அரங்கில் பார்க்க முடிவு செய்தபடியால் அதன்படி சென்றேன்.முக்கால் வாசி அரங்கம் காலியாக இருந்தது.படம் வந்து ஐந்தாவது நாள் .

ஆனால் படம் அந்த அளவு மோசம் இல்லை என்றே சொல்வேன்.ஆனால் நிச்சயம் எதோ குறைகிறது .கதை வலுவில்லை .இந்த கதைக்கு ஒட்டி பிறந்த மேட்டர் எல்லாம் தேவை இல்லை.ஆனால் ஆனந்த் இந்த ஒட்டி பிறந்த ரெட்டை விஷயத்தை முதலில் வைத்து கொண்டு பிறகே அதற்க்கு ஏற்றாற்போல் இந்த கதை உருவாக்கி உள்ளார் என்பதை அவர் படம் தொடர்பாக கொடுத்த பேட்டிகளில் மூலம் அறியலாம் .

படத்தின் நீளம் பெரிய குறை.படம் முடிவதற்குள் நிறைய விஷயங்கள் ஒரே அடியாக நிறைய நமக்குள் அழுத்த படுகிறது.ஒரு கதை இயல்பாக நம்முள் தொடருவதற்கும் ஒரு விஷயத்திற்கு கதை பண்ணுவதற்கும் இருக்கும் வித்யாசத்தை இந்த படம் காட்டிவிட்டது.கனா கண்டேன் -2005,அயன்- 2009,கோ-2011.இப்படி ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நிறைய நேரம் எடுத்து அதை சீர்படுத்தி எடுத்த ஆனந்த் இதில் கோ முடித்த கையேடு அவசரமாக களம் இறங்கி  விட்டாரோ ? 

தன்  பட ஹீரோக்கள் வகிடு எடுத்து தலை வாரி நெற்றியில் மூன்று முடிகளை விட வேண்டும் என்பது வரை கவனமாக பார்க்கும் ஆனந்த்  திரை கதையிலும் இன்னும் உழைத்திருக்கலாம்.

Tuesday 2 October 2012

தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம்


தாண்டவம் : படதேர்வில் மீண்டும் சறுக்கிய விக்ரம் 

படம் மொக்கை என்று தெரிந்தே இந்த படத்திற்கு போனேன்.காரணம் தெரியவில்லை.பதிவர் நண்பர் ராஜ் சொன்னது போல் மூணு மாதம் கழித்து  விஜய் டி.வியில் போடும்போது பார்த்திருக்கலாம்.விக்ரம் மீண்டும் படதேர்வில் சறுக்கி இருக்கிறார்.அவரை சொல்லி குற்றமில்லை.தெய்வ திருமகள் எடுத்த இயக்குனருடன் என்பதால் ஓகே சொல்லி இருப்பார்.தெய்வ திருமகள் சீன் பை  சீன் IAM SAM ரெடி ஆக இருந்தது.

படத்தின் கதை இந்நேரம்  எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.கடந்த மூன்று நாட்களாக எல்லா ஊடகங்களிலும் இந்த பட விமர்சனம் தான் ஓடுது அதனால் நான் அதற்குள் போக போவதில்லை.படத்தின் பிளஸ் ,மைனஸ் இவை மட்டுமே பார்க்கலாம்.

படத்தின் பிளஸ்; 
விக்ரம் : கடும் உழைப்பு .பார்வை இல்லாதவரின் உடல் மொழி அப்படியே .WELL DONE.
ECHOLOCATION என்ற தமிழுக்கு புதிய விஷயம் .
இசை 

மைனஸ் :
கதை : எளிதில் யூகிக்க கூடிய ,திருப்பங்கள் அற்ற கதை.
திரைக்கதை ( படம் கொஞ்சம் கூட நகரவே மாட்டேன் என்கிறது)
எல்லோரும் ஏன் ரொம்ப மெதுவாக பேசுகிறார்கள்.? அதுவும் விக்ரம் கண்  தெரியும் போது கூட அப்படியே தான் பேசுகிறார். (கண் தெரியாத போது சோகத்தில் இருக்கிறார்)
அனுஷ்கா -அழகாகவே இருக்கிறார்.ஆனால் முத்திபோய் மூணு குழந்தைகளுக்கு அம்மா ஆன ஆண்டி போல் இருக்கிறார்.
சந்தானம்: ரொம்ப பிஸி ஆக இருக்கும் அவரை போய் ஏன் இந்த வேடத்திற்கு ? சுத்தமாக ஒன்றும் இல்லை.இதற்க்கு தெய்வ திருமகள் படத்தில் அனுஷ்காவின் தோழியை லவ் பண்ணும் கிஷோரை கூட நடிக்க வைத்திருக்கலாம்.
படத்தின் நீளம் .
வேகம்: தொடக்கத்தில் ஆமை வேகத்தில் நகரும் படம் ,கிராமத்து காட்சி கொஞ்சம் செல்ல டெல்லி வந்ததும் படுத்து லண்டனில் தூங்கி விடுகிறது.


மொத்தத்தில் செண்டிமெண்ட் படமான தெய்வ திருமகள் படத்தையே ஓரளவு பார்க்கும்படி நகர்திசென்ற விஜய் ,த்ரில்லர் படம் என்று சொல்லி இப்படி இழு இழுவென இழுத்துவிட்டார்.கொஞ்சம் கூட வொர்த் இல்லாத படம் .பதிவர் ராஜ் சொன்னதையே வழி மொழிகிறேன்.பார்க்க விருப்பம் உள்ளவர்கள் விஜய் டி.வியில் போடும் வரை காத்திருக்கலாம்.

இந்த ஆண்டு என்ன ஆச்சு ? ஓடும் என்று பெரிதாக எதிர்பார்க்க பட்ட அரவான்,மூணு,சகுனி,பில்லா 2,முகமூடி என எல்லா படங்களுமே ஏமாற்றி விட்டது.இன்னும் இந்த ஆண்டு மிச்சம் இருப்பது துப்பாக்கி,மாற்றான் மட்டுமே.விஸ்வரூபம் இந்த ஆண்டு வெளி வரும் என்று நான் நினைக்கவில்லை.பார்க்கலாம் துப்பாக்கி ,மாற்றான் இரண்டும் என்ன செய்கிறது என்று.

Monday 1 October 2012

விக்ரம் -சூர்யா ---குறிக்கோள் கமல் நாற்காலி

விக்ரம் -சூர்யா ---குறி  கமல் நாற்காலி 



விக்ரம் -வயது 46 
சூர்யா- வயது 37 
விக்ரம் ,சூர்யா இருவரும் இன்றைய தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்திருப்பவர்கள்.எடுத்துக்கொண்ட கதையின் கதாபாத்திரங்களுக்காக உடலை எப்படியும் மாற்ற முயற்சித்து வருபவர்கள்.ரஜினின் இடத்திற்கு ஆசைப்படாமல் கமலின் நாற்காலி மேல் ஆசை கொண்டு உழைத்து வருபவர்கள்.இருவருமே ஒரே இடத்திற்கு முயல்பவர்கள்.இருவரின் முயற்சிகள் ,வெற்றிகள் ,எதிர்காலம் பற்றி பார்க்கலாம்.

விக்ரம் .முதல் படம் வெளிவந்தது 1990.முதல் வெற்றியை பார்த்தது 1999.ஸ்ரீதர்,பி.சி.ஸ்ரீராம்,விக்ரமன் போன்றவர்களின் படங்களில் நடித்தபோதும் தோல்வியே கண்டார்.பட வாய்ப்பு இல்லாமல் மலையாளம்,தெலுங்கு படங்களில் துணை நடிகர் லெவலுக்கு போனவர்.தமிழில் ,பிரபுதேவா, அப்பாஸ் ,அஜீத் (அமராவதி ) போன்றவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தார்.பம்பாய் படத்தில் நடிக்க தேர்வு செய்யபட்டு பின் வாய்ப்பை இழந்தார்.ஒரே எதிர்பார்பான உல்லாசம் தோல்வி அடைந்தது.விக்ரமின்  தந்தை நடிகர் என்றாலும் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை.விக்ரமின் அம்மாவின் அண்ணன் நடிகர் தியாகராஜன் (நடிகர் பிரசாந்தின் அப்பா) என்ற போதும் பெரிதாக இவருக்கு உதவவில்லை.

ராதிகாவுடன் லண்டனில் எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி படத்தில் நடிக்கும் நேரம் .சேது படம் பாதி முடித்த நிலையில் உள்ளது.ராதிகா அடுத்த தொடரில் முக்கிய வேடம் தருவதாக அழைக்கிறார்.விக்ரம்"ஒரு நல்ல படம் (சேது) நடித்துகொண்டிருக்கிறேன்.அது கை கொடுக்கும் என்று நினைக்கிறன்".ஒரு வழியா சேது ஹிட்.அதன் பின் கவனமாக படம் தேர்வு.தில்,ஜெமினி,தூள்,சாமி,பிதாமகன்,அந்நியன் இவை அதன் பின் இவர் கொடுத்த ஹிட் படங்கள்.ஆனாலும் போலீஸ் வேடமா முடியை ஓட்ட வெட்டி ,உடம்பை முறுக்கேற்றி காட்டுதல்.காசியில் பார்வையற்ற பாடகன்.அதிலும் இவரது அற்பணிப்பை பார்க்கலாம்.சமுராய்,கிங்,அருள்,மஜா,பீமா,கந்தசாமி,ராவணன்,ராஜபாட்டை இவை (இன்னும் சில)சறுக்கிய படங்கள்.

சூர்யா -தந்தை 70-80 களின் நாயகன்.முக்கியமாக நல்லபேர் பெற்றவர்.சூர்யாவின் அறிமுகம் எளிதாகவே இருந்தது.அஜீத் வெளியேறிய நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கினார்.அந்த படத்தில் ஒழுங்காக நடிப்பு  வராமல் கஷ்டப்பட்டவர்.பாடல் எடுக்க கல்கத்தா போனபோது இங்கே பிரியாணி நல்லயிருன்னு கேள்விபட்டேனே என்று சொல்லி டைரக்டர் வசந்திடம் வாங்கி கட்டிகொண்டார்.அத பட விமர்சனத்தில் (குமுதமோ ,விகடனோ ) சூர்யா நடனம் ஆடுவது அவருக்கும் கஷ்டம் ,அதை பார்க்கும் நமக்கு கஷ்டம் என்று எழுதினார்கள்.எதோ ஒரு விழாவுக்கு எல்லா நடிகர்களோடும் ரயிலில் சென்றபோது தூங்கிகொண்டிருந்த இவரையும் அப்பாஸையும் அதட்டி எழுப்பிய நடிகர்  ரகுவரன் "எப்படிடா உங்களுக்கு தூக்கம் வருது ? சினிமாவில் என்ன சாதிச்சுட்டு தூங்கறீங்க ? என்று திட்டி இவரை உசுப்பி விட்டார்.போய் சேரும்வரை கடும் வார்த்தைகளால் திட்டி அறிவுறுத்தி இருக்கிறார்.அதன் பின் மனதில் உறுதி எடுத்த சூர்யா தன் தனி வெற்றிக்காக(விஜய் இல்லாமல் ) ஆறு ஆண்டுகள் நந்தா வரும்வரை காத்திருந்தார்.அதன்பின் அஜீத் விலகியதால் ஜோதிகா சிபாரிசில் காக்க காக்க நடிக்கிறார்.தொடர்ந்து பிதாமகன்,கஜினி,வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம் போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார்.நந்தாவுக்கு பின் என்றால் உன்னை நினைத்து,ஸ்ரீ,பேரழகன்,ஆயுத எழுத்து,மாயாவி,போன்ற படங்கள் சரிக்கி விட்டது.சில சுமாரான படங்களும் ( ஆறு,வேல்,ஆதவன் )உள்ளன.

இருவருமே படத்திற்கு படம் கடும் உழைப்புடன் செயல்படுகிறார்கள். இருவருமே நடுநடுவே கமல் எண்பதுகளில் முயற்சித்து போல் வணிக மசாலா படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார்கள்.இருந்தாலும் இருவரின் குறியும் ஒன்றுதான்.அது கமல் நாற்காலி.இதில் வயது சூர்யாவிற்கு கை கொடுக்கிறது.அவர் இன்னும் நாற்பதை தொடவில்லை.அதனால் உடல்,மனம் இரண்டும் பல பரீட்சைகளுக்கு ரெடி.ஐம்பது வயதை நெருங்கும் விக்ரம் உடல் அளவில் தயார் என்றாலும் இயற்க்கை வயதை முகத்தில் காட்டிவிடுகிறது.இன்றைய தமிழ் சினிமாவில் படங்களை தேர்வு செய்வதில் சூர்யாவை மிஞ்ச ஆளில்லை.அவசரப்படாமல் நாள் எடுத்துக்கொண்டு யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.அந்த விஷயத்தில் விக்ரம் இன்னும் பொறுமையுடன் செயல் பட வேண்டும்.ராஜபாட்டை எல்லாம் தேவையே இல்லை.ஆனாலும் சூர்யா ஒப்பனையில் ,உடல் தோற்றத்தில் காட்டும் அக்கறை நடிப்பில் விக்ரமை ஒப்பிட்டால் குறைவு என்றே சொல்ல வேண்டும்.உடல் மொழி ,குரல், நடிக்கும் போது  சில PAUSE என்று சொல்லப்படும் அமைதி போன்றவற்றை விக்ரம் சூர்யாவை விட நன்றாக வெளிபடுத்துகிறார்.

என்ன இருந்தாலும் இருவருமே தன் நேரத்திற்காக காத்திருந்து ,கிடைத்ததும் அதில் முழுமையாக வெளிப்படுத்தி,அதில் வெற்றி கண்டதும் அதன் பின்னும் பொறுமையாக படங்களை தேர்வு செய்து வெற்றி பெறுவது என்று ஒரு "வெற்றி கதையை " நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.எந்த துறைக்கும் அந்த வெற்றி கதைகள் ஒரு பாடம் தான்.